Friday, May 10, 2024
Home » காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகைப்பட கண்காட்சி பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகைப்பட கண்காட்சி பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

by Karthik Yash

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியினை, பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் சாதனைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என கண்காட்சி தொடக்க விழாவில் பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியினை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், ஒரு வார காலத்திற்கு சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளன. தமிழ்நாடு அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், உங்களை தேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா, மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கி வருகிறது.

இதோபோல், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அமைப்பப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், திரளாக பார்வையிட்டு, அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தெரிந்து பயன்பெறுவதற்காக இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை அதிநவீன மின்னணு வாகனத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை பார்வையிட்டு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும், பல்வேறு துறைகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

* நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 19 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து, 24 ஆயிரத்து 209 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து, 24 ஆயிரம் மதிப்பிலான பேட்டரி வீல் சேர்களும் வழங்கி, மாவட்ட தொழில் மையம் சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களையும் அமைச்சர் வழங்கினார்.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi