சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் வழக்கில் அடையார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று நீதிமன்றத்தில் 250 பக்க குற்றப்பத்திகை தாக்கல் செய்தனர். அதில் 162 மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் பாலியல் தொடர்பாக புகார் அளித்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலர் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்களான சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் என 4 பேர், பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, அந்நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த மார்ச் 29ம் தேதி கல்லூரி வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பிறகு மாநில மகளிர் ஆணையம் தலைவர் குமாரி, போராட்டம் நடத்திய மாணவிகள் மற்றும் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள், முன்னாள் மாணவிகளிடம் மார்ச் 31ம் தேதி நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலமாக பதிவு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் மாநில மகளிர் ஆணைய இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் கடந்த 2019ம் ஆண்டு கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின்படி, பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்தனர். அதைதொடர்ந்து பாலியல் வழக்கு தொடர்பாக முன்னாள், மற்றும் தற்போது படித்து வரும் மாணவிகள் என 169 பேருக்கு சம்மன் அனுப்பினர். அதில் 162 மாணவிகள் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பதிலை வாக்கு மூலமாக பதிவு செய்து கொண்டனர்.
இந்நிலையில், கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் வழக்கில் அடையார் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தயார் செய்தனர். பின்னர் நேற்று நீதிமன்றத்தில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் 162 மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் பாலியல் தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெரும்பாலான மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர். 162 மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் பாலியல் தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.