பேரவையில் 2024-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாத்தில் உத்திரமேரூர் தொகுதி க.சுந்தர்(திமுக) பேசியதாவது: உத்திரமேரூரிலுள்ள காவல் நிலையக் கட்டிடம் 100 ஆண்டுகளைக் கடந்து, பழுதடைந்த நிலையில், அது சில மாதங்களாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். வாலாஜாபாத் தாலுகா தலைமையிடம், அதற்கு உரிமையியல் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும். களியபேட்டை பகுதியில் கால்நடை மருந்தகம் அமைத்துத் தர வேண்டும். தமிழ்நாட்டில் 73 ஊராட்சிகளைக் கொண்ட மிகப்பெரிய ஒன்றியமாக உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் விளங்குகிறது.
எல்லோருடைய கனவையும் நிறைவேற்றுகின்ற முதல்வர் இந்த எளியவனுடைய கனவையும் நிறைவேற்ற வேண்டும். கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் பிறந்த ஜூன் 3ம் தேதியை செம்மொழி தமிழ் தினமாக அறிவிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.25 லட்சம் என ஆரம்பித்து வைத்தவர் கலைஞர்தான். தற்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் தங்களுடைய தொகுதிகளுக்கு தைரியமாக செல்கிறார்கள் என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் கலைஞர். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை 5 கோடி ரூபாயாக உயர்த்தி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.