புதுடெல்லி: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட 6 பேர் மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்று கொண்டனர். இமாச்சலபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி.நட்டா, 2012 முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் நட்டா போட்டியிடுவார் என்று செய்திகள் வௌியான நிலையில், கடந்த மார்ச் 4ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
இதனிடையே 15 மாநிலங்களை சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய கடந்த பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் குஜராத்தில் இருந்து நட்டா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி.நட்டா நேற்று மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்.
அவரை தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து அசோக்ராவ் சங்கர்ராவ் சவான், ராஜஸ்தானில் இருந்து சுன்னிலால் கராசியா, தெலங்கானாவில் இருந்து அனில் குமார் யாதவ் மண்டாடி மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து சுஷ்மிதா தேவ், முகமது நதிமுல் ஹக் ஆகிய 5 பேரும் மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றனர்.