ஜம்தாரா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தண்டவாளத்ததை கடக்க முயன்ற போது 12 பேர் ரயிலில் அடிபட்டு பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல பயணிகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டம் கலாஜாரியா ரயில்வே கிராசிங் அருகே நேற்று இரவு அன்கா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து இறங்கிய சில பயணிகள் தண்டவாளத்தை கடந்து மறுபகுதிக்கு செல்ல முயன்றனர். அப்போது திடீரென அந்த தண்டவாளத்தில் மற்றொரு ரயில் வந்தது. எதிர்பாராத நிலையில் ரயில் வந்ததால், பயணிகள் செய்வதறியாமல் அங்குமிங்கும் சிதறி ஓடினர்.
இதில் 2 பேர் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். பல பயணிகள் மீது ரயில் மோதிச் சென்றது. தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. இதில் தண்டவாளப் பகுதியில் இருந்து 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து ஜம்தாரா சப்கலெக்டர் ஆனந்த் குமார் கூறுகையில், ‘‘கலாஜாரியா ரயில்வே கிராசிங் அருகே, ரயில் நின்ற போது சில பயணிகள் இறங்கி தண்டவாளத்தில் நடந்துள்ளனர். அப்போது வேறொரு ரயில் அந்த தண்டவாளத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுவரை 2 சடலங்கள் மீடப்பட்டுள்ளன’’ என கூறினார்.
ஆனால், பயணிகள் ரயில் தீப்பிடித்ததால் அதிலிருந்து தப்பிக்க பயணிகள் தண்டவாளத்தில் எகிறி குதித்து ஓடிய போது ரயிலில் அடிபட்டு 12 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.