மாலே: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தின் முதல் குழு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபராக முகமது முய்சு கடந்த ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து இந்தியா, மாலத்தீவு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை மார்ச் 15ம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு இந்தியாவிடம் அந்நாடு முறைப்படி கோரிக்கை விடுத்தது. மாலத்தீவில் இந்தியா 3 விமான தளங்களை நிர்வகித்து பராமரித்து வருகிறது. அங்கு 88 ராணுவ வீரர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவற்றில் முதல் தளத்தில் இருந்து மார்ச் 10ம் தேதிக்குள்ளும், மீதமுள்ள 2 தளத்தில் இருந்து மே 10ம் தேதிக்குள்ளும் ராணுவத்தினர் வாபஸ் பெற இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், முதல் ராணுவ குழு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல் தளத்தில் ராணுவத்தினருக்கு பதிலாக ராணுவம் அல்லாத தொழில்நுட்ப குழு பணி அமர்த்தப்படுகிறது. அவர்கள் நேற்று முன்தினம் இரவு மாலத்தீவின் அட்டு பகுதிக்கு சென்றடைந்தனர். உடனடியாக பொறுப்பு ஒப்படைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டதாக மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.