திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில், எற்கனவே 70 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 25 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசிப்பவர் வரலட்சுமி (52). இவர் கல்பாக்கம் அடுத்த அனுபுரம் பகுதியில் இயங்கி வருகின்ற அணுசக்தி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த சனிக்கிழமை சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலை பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வரலட்சுமி உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து வரலட்சுமி கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் இதேப் பகுதியில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், மறுநாளே இப்படி ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.