மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகாவில் பெரிய வெளிக்காடு ஊராட்சி உள்ளது. இங்கு திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள நாவலூர் கிராமத்தில் இருந்து 27 பழங்குடியின குடும்பத்தினர் வெளிக்காடு ஊராட்சிக்கு இடம் பெயர்ந்து அடிப்படை வசதியின்றி குடிசை அமைத்து சில வாரங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த குடும்பங்களில் உள்ள 9 சிறுவர், சிறுமியர்கள் பெற்றோர் இடம் பெயர்ந்ததால் பள்ளிக்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை வெளிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு ‘நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்’ என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனையடுத்து, அந்த 9 சிறுவர், சிறுமிகளுக்கு பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, ஊர்வலமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தனர்.
பள்ளியில் சேர்ந்தவர்களுக்கு சீருடை, பாட புத்தகம், எழுது பொருட்கள், காலை உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், லத்தூர் வட்டார கல்வி அலுவலர் செந்தில் குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.