பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே எலெக்ட்ரானிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பூத்தப்பேடு பெருமாள் கோயில் தெருவில், தனியாருக்கு சொந்தமான எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது.
வியாபாரம் முடிந்த பிறகு நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு கடை உரிமையாளர் வீட்டிற்கு சென்று விட்டார்.இந்நிலையில், இரவு சுமார் 12 மணியளவில் கடையில் இருந்து புகை வந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உடனடியாக ராமாபுரத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு ராமாபுரம், பூந்தமல்லி, விருகம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் இப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.இந்த தீ விபத்து பற்றி, ராமாபுரம் ராயாலாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.