வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை பயன்பாடிற்கு கொண்டு வர வேண்டும் என கிரம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
அகரம் ஊராட்சியின் காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்டது. இதனால், விரிசல் ஏற்பட்ட இடிந்து விழும்நிலையில் காணப்பட்டதால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கு பெற்றோர் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.
இதில், குழந்தைகளுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் இந்த அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘அகரம் காலனி இங்கு 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் தற்போதுவரை இந்த அங்கன்வாடி மையம் திறக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.