சென்னை: ஜம்னாலால் பஜாஜ் பவுண்டேஷன் சார்பில் சாதனையாளர்கள் 4 பேருக்கு விருது வழங்கப்பட்டது. ஜம்னாலால் பஜாஜ் பவுண்டேஷன் சார்பில் 45வது ஆண்டு விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஜம்னாலால் பஜான் பவுண்டேஷன் அறக்கட்டளை வாரிய தலைவர் சேகர் பஜாஜ் மற்றும் இதன் உறுப்பினர்கள், ஆலோசகர்கள் பங்கேற்றனர். இதில் மனிதாபிமானம் மற்றும் சமூக பணிகளுக்காக ஆற்றிய சாதனைகளைப் பாராட்டி 4 பேருக்கு விருது வழங்கப்பட்டது. 45வது ஆண்டு விருது வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின சுகாதார முன்முயற்சி அமைப்பின் அறங்காவலர்கள் டாக்டர் ரெஜி ஜார்ஜ் மற்றும் லலிதா ரெஜி ஆகியோருக்கு அவர்களின் ஆக்கப்பூர்வ பணிகளுக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவேகானந்தா பயோடெக்னாலஜி இன்ஸ்டிடியூட் இணை இயக்குநர் ராமலட்சுமி தத்தா, ஊரக மேம்பாட்டுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்கான விருது, பீகாரைச் சேர்ந்த நாரி குஞ்சன் செயலாளர் சுதா வர்க்கீசுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் நலன் விருது, காந்தி ஆஸ்ரம் டிரஸ்ட் இயக்குநர் ராக நாபா குமாருக்கு இந்தியாவுக்கு வெளியே காந்திய சிந்தனைகளை ஊக்குவித்ததற்கான சர்வதேச விருது வழங்கப்பட்டது. ஜம்னாலால் பவுண்டேஷன் நிறுவனர் ராமகிருஷ்ண பஜாஜின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி, விருது பெறுவோருக்கான பரிசுத்தொகை ரூ.10,00,000ல் இருந்து ரூ.20,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, என பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.