ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாநில போலீசார், சிஆர்பிஎப் மற்றும் ராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்பு படை வீரர்கள் குல்காமில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப் படை வீரர்கள் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சண்டை நேற்று முதல் நடந்து வந்தது.
இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று, எச் போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிப் பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மோதல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.