திருமலை: ஆந்திராவில் வரும் மே 13ம்தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலையொட்டி ஒய்எஸ்ஆர் காங். கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெகன்மோகன் தேர்தல் பிரசார பஸ் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு என்டிஆர் மாவட்டம் விஜயவாடா சிங் நகரில் யாத்திரை சென்றபோது மர்ம ஆசாமிகள் கல் வீசி தாக்கியுள்ளனர். இதில் முதல்வர் ஜெகன்மோகன் படுகாயம் ஏற்பட்டது. முதல்வர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ேடார் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி நேற்று சித்தூர் காந்தி சிலை அருகே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று விஜயவாடா தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனாவிடம் புகார் மனு அளித்தனர். அதில், ஜெகன்மோகன் மீது கல்வீசி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, தான் நடத்தும் கூட்டங்களில் கட்சியினரிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். அதன் காரணமாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என தெரிவித்தனர். இந்நிலையில் நேற்றிரவு விசாகப்பட்டினம் மாவட்டம், காஜூவாகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் சந்திரபாபு மீதும், குண்டூர் மாவட்டம் தெனாலியில் ஜனசேனா கட்சி சார்பில் நடந்த ‘ரோடு ஷோ’வில் பங்கேற்ற நடிகர் பவன்கல்யாண் மீதும் மர்ம நபர் கல் வீசி தாக்கினர்.