ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை 2ம் கட்ட அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல், யானை தந்தத்தால் ஆன பகடைக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த ஆண்டு மார்ச் 16ம் தேதி முதற்கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்களின் கண்காட்சியை அகழாய்வு நடைபெறும் விஜயகரிசல்குளத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிலையில், வெம்பக்கோட்டையில் கடந்த ஏப். 6ம் தேதி 2ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று நடந்த அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல், 3.9 செமீ நீளம், 1.4 செமீ அகலம், 191 மி.கிராம் எடையுள்ள யானை தந்தத்தால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 900க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கீழடிக்கு நிகராக வெம்பக்கோட்டையிலும் ஒரு நாகரிக தமிழ் சமூகம் வாழ்ந்துள்ளதை மெய்ப்பிக்கிறது என வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.