Thursday, May 23, 2024
Home » இத்தாலி அருகே சோகம்: படகு கவிழ்ந்து 41 அகதிகள் பலி

இத்தாலி அருகே சோகம்: படகு கவிழ்ந்து 41 அகதிகள் பலி

by Suresh

ரோம்: இத்தாலி அருகே படகு கவிழ்ந்து 41 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முயற்சிக்கின்றனர்.

இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்த அகதிகள் படகு, சிசிலி நீரிணை பகுதியில் கவிழ்ந்தது. அப்போது, அவ்வழியாக வந்த மால்ட்டா நாட்டு கொடியேற்றிய ரிமானோ சரக்கு கப்பலில் இருந்தவர்கள், இதில் 4 பேரை மட்டும் மீட்டனர்.

மற்றவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இருப்பினும் பலர் இறந்ததாக தெரியவந்தது. மீட்கப்பட்டவர்கள் இத்தாலிய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, சிசிலி தீவான லாம்பெடுசாவில் உள்ள
முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையில், கடலில் கவிழ்ந்த படகில் மேலும் 41 பேர் இருந்ததாகவும், அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகவும், இவர்களில் 3 சிறுவர்களும் அடங்குவர் எனவும் தெரியவந்தது.

அண்மை காலமாக, துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி சென்ற ஏராளமான அகதிகள் படகுகள் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்தாண்டு மட்டும் இதுவரை துனிசியா வழியாக 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இத்தாலிக்கு கடத்தி வரப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 45,000 அகதிகள் துனிசியா வழியாக அழைத்து வரப்பட்ட நிலையில், இந்தாண்டில் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

You may also like

Leave a Comment

20 − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi