சென்னை: அண்ணாமலை மிரட்டியதற்கு பிறகு ரெய்டு நடப்பது சந்தேகத்தை வலுவாக்குகிறது என்று விவசாயிகள் தொழிலாளர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் மற்றும் விமர்சனங்களுக்கு அண்மை காலமாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக விளக்கங்களை கொடுத்தும், விமர்சனங்களை செய்து வருவது நாடறிந்தது.
அதை நேருக்கு நேர் எதிர் கொள்ள முடியாத அண்ணாமலை, தான் சார்ந்த பாஜ ஆட்சியின் மூலம் வருமானவரி துறையை ஏவி விட்டு அமைச்சருக்கு வேண்டியவர்களின் இல்லங்களில் எல்லாம் சோதனை நடப்பது மூலம் அமைச்சருக்கும் இந்த அரசுக்கும் நெருக்கடி கொடுக்க முயல்கிறார். இதன் மூலம் தமிழக அரசுக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது.
குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அவரது பயணம் மகத்தான வெற்றியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசினை கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் வருமான வரி துறையை ஏவி விட்டு இருக்கிறது.