Friday, May 17, 2024
Home » காசாவை தொடர்ந்து லெபனான் எல்லையில் தீவிரமடையும் தாக்குதல் ஈரான், ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை: கடும் விபரீதத்தை சந்திக்க வேண்டுமென பிரதமர் நெதன்யாகு ஆவேசம்

காசாவை தொடர்ந்து லெபனான் எல்லையில் தீவிரமடையும் தாக்குதல் ஈரான், ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை: கடும் விபரீதத்தை சந்திக்க வேண்டுமென பிரதமர் நெதன்யாகு ஆவேசம்

by Ranjith

டெல்அவிவ்: காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வரும் நிலையில், லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா படையினர் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் இப்போர் அண்டை நாடுகளிலும் பரவும் சூழலில், தங்களை சோதிக்க நினைத்தால் கடும் விபரீதங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான் நாட்டிற்கும், ஹிஸ்புல்லா படைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர், கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் வெடித்துள்ளது.

காசாவின் மூலை முடுக்கெங்கிலும் இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிகிறது. முப்படைகளையும் கொண்டு காசா மீது இடைவிடாத தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் காசாவிற்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்துவதற்காக அப்பகுதியின் வடக்கில் வசிக்கும் 11 லட்சம் பாலஸ்தீன மக்களும் தெற்கு நோக்கி வெளியேற இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்தது. இரண்டுக்கும் மேற்பட்ட முறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், 10வது நாளாக நேற்றும் போர் நீடித்தது. மக்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு முடிவடைந்த நிலையில், காசா எல்லையின் வேலியை ஒட்டி இஸ்ரேல் பீரங்கிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும், இன்னும் மக்கள் பலர் வடக்கு பகுதியில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை வெளியேற விடாமல் ஹமாஸ் படையினர் தடுத்து நிறுத்தி வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. இதுவரை 10 லட்சம் பேர் வரையிலும் தெற்கு பகுதியில் சென்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இதற்கிடையே, ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் உத்தரவில் செயல்படும் ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலின் அண்டை நாடான லெபனான் எல்லையில் நேற்று தாக்குதலை தீவிரப்படுத்தினர். சுமார் 20 ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா படையினர், எல்லையில் இஸ்ரேல் ராணுவம் வைத்துள்ள உளவு கண்காணிப்பு கேமராக்களை அழித்தது.

இதனால் எல்லையை ஒட்டிய 2 கிமீ தொலைவில் உள்ள 28 கிராமப்புறங்களில் இருந்து மக்களை இஸ்ரேல் ராணுவம் அப்புறப்படுத்தியது. காசவிற்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால், பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஹிஸ்புல்லா அமைப்பு தயாராக இருக்கிறது. இதனால் இப்போர் அண்டை நாடுகளிலும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நேற்று தொடங்கி வைத்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘’75 ஆண்டுகள் கடந்தும் கூட சுதந்திரப் போர் இன்னும் முடியவில்லை.

இப்போரில் நாங்கள் வெல்வோம். இது வெளிச்சத்திற்கும் இருட்டிற்கும் நடக்கின்ற போர். மனிதநேயத்திற்கும், மிருகத்தனத்திற்கும் இடையேயான போர். இந்த போரில் நாஜிக்களுக்கு இணையான ஹமாசை முழுமையாக அழிக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். இந்த விஷயத்தில் ஒற்றுமையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது எங்களுக்கான போர் அல்ல. உங்களின் போரின் கூட. நாங்கள் காயப்பட்டுள்ளோம். ஹமாசின் ஊடுவல் மூலம் எங்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். எனவே எங்களை சீண்டிப் பார்க்க நினைக்க வேண்டாம். அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்.

எங்களை சோதிக்க நினைத்தால் அதற்கான விளைவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையாக இருக்கும்’’ என ஈரான், ஹிஸ்புல்லா படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவை இஸ்ரேல் ராணுவம் சல்லி சல்லியாக துளைத்த நிலையில், ஹமாஸ் படையினர் நேற்றும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஜெருசலேமில் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்ட நிலையில், நாடாளுமன்ற கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு எம்பிக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேலில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. காசா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், மேலும் பல இடங்களில் தாக்குதல் விரிவடையும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிரதுல்லாஹின் நேற்று மீண்டும் எச்சரித்துள்ளார்.

* 2,808 பேர் பரிதாப பலி
காசாவில் பலியானோர் எண்ணிக்கை 2,808 ஆக அதிகரித்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. 10,859 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 254 பேர் பலியானதாகவும், மொத்தமாக இறந்தவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் டாக்டர், நர்சுகள் என 37 சுகாதார பணியாளர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் நிமிடத்திற்கு ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். மேலும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதால் தெற்கில் உள்ள கான் யூனிஸ் நகரம் ஸ்தம்பித்துள்ளது.

* ரபா எல்லை மூடல்
காசாவில் இருந்து வெளியேற எகிப்தை ஒட்டிய ரபா கிராசிங் பாயிண்ட் மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இவ்வழியாக அமெரிக்கர்கள் உள்ளிட்ட மக்களை வெளியேற்ற அமெரிக்கா, எகிப்து நாடுகள் முயற்சி மேற்கொண்டன. ஆனால் ரபா பகுதியில் நேற்றும் குண்டுகள் வீசப்பட்டன. இரவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் நேற்று ரபா எல்லை திறக்கப்பட்ட சில நிமிடத்தில் மீண்டும் மூடப்பட்டதால் அங்கிருந்து வெளியேற கூடியிருந்த ஏராளமான மக்கள் முடங்கி உள்ளனர்.

* பணயக் கைதிகள் 199 பேர் கதி என்ன?
இஸ்ரேலில் நுழைந்த ஹமாஸ் படையினர் 199 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. அவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

*பாலஸ்தீன தூதருடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஒன்றிய பாஜ அரசு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரகத்திற்கு எதிர்க்கட்சிகள் குழு நேற்று சென்றது. காங்கிரசின் மணிசங்கர் அய்யர், ஐக்கிய ஜனதா தளத்தின் கே.சி.தியாகி, பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி, சிபிஐ (எம்.எல்) பொதுச் செயலாளர் தீபன்கர் பட்டாச்சார்யா ஆகியோர் பாலஸ்தீன தூதர் அட்னான் அபு அல் ஹைஜாவை சந்தித்து இஸ்ரேலால் காசாவில் பாலஸ்தீனர்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக போரை நிறுத்தி, காசாவில் மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், 15 எதிர்க்கட்சி தலைவர்கள் கையொப்பமிட்ட அறிக்கையை அவர்கள் அளித்தனர்.

* 24 மணி நேரத்தில் எல்லாம் தீர்ந்துவிடும்
இஸ்ரேல் ராணுவம் காசாவை முற்றிலும் முடக்கி உள்ளதால், உணவு, குடிநீர் இன்றி பாலஸ்தீன மக்கள் தவிக்கின்றனர். இன்னும் 24 மணி நேரத்தில் எரிபொருள் மொத்தமாக தீர்ந்துவிடும் என்பதால் மருத்துவமனையில் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உடனடியாக காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. இதற்கிடையே எகிப்து எல்லையில் பல நாடுகள் அனுப்பிய நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் பல கிமீ தூரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

1 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi