ஒன்றிய புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளான சிபிஐ, ஐடி, அமலாக்கத்துறை ஆகியவை நடுநிலையோடு இயங்கக்கூடிய சுயேச்சையான அமைப்புகள். ஆனால் அதன் இன்றைய நிலையோ சிறு குழந்தைக்கு கூட தெரியும் வகையில் உள்ளது. ஒன்றிய பாஜ அரசின் ஏவல் துறையாக, அதன் அரசியல் லாப நோக்கத்திற்காக இயங்கும் ஏஜென்சியாக மாறிப்போய் கிடக்கிறது. எதிர்க்கட்சியினரை குறிவைத்து சோதனை நடத்துவது, மிரட்டுவது என்று அதன் தொழில்முறையே மாற்றம் கண்டுவிட்டது.
சமீபத்தில் நாட்டையே உலுக்கிய ‘தேர்தல் பத்திர ஊழல்’ விவகாரத்தில் பின்னணியில் இருந்து செயல்பட்டதே இந்த விசாரணை அமைப்புகள் தான் என்பது அம்பலமாகி உள்ளது. இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் சேர்ந்து விட்டதோ என்னும் அச்சம் இப்போது முளைத்திருக்கிறது. நாடே எதிர்பார்த்த மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டத்தில், ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதன் பின் 46 நாட்கள் கழித்து ஜூன் 4ம் தேதி தான் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் தான் சந்தேகம் தோன்ற தொடங்கியிருக்கிறது. அதற்கு காரணம் பிரதமர் மோடி. புயல், பெருவெள்ளம் என தமிழகம் தத்தளித்துக்கொண்டிருந்தபோது ஆறுதல் சொல்லக்கூட வராதவர், நிவாரணமாக ஒரு பைசா கூட தராதவர் கடந்த சில வாரங்களில் மட்டும் ஐந்து முறை தமிழகத்துக்கு வந்து சென்றிருக்கிறார். இதோடு நிற்கவில்லை.
வரும் 18ம் தேதி கோவை வருகிறார். தொடர்ந்து 19ம் தேதி சேலம் வருகிறார். அதன் பிறகும் பிரதமர் தமிழகம் வர உள்ளார் என தமிழக பாஜ தலைவர் கூறியிருக்கிறார். முதல்கட்டத்தில் தேர்தல் நடக்கும் என்பதை அறிந்து தான் தமிழகத்துக்கு தொடர்ந்து வந்து மோடி பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பே அந்த விவரங்கள் பிரதமருக்கு தெரிந்தது எப்படி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இது தற்செயல் என்பதை துளியளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது திட்டமிட்ட செயலாகவே இருக்க முடியும். இதுவே தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேக நிழலை படரச் செய்கிறது.மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டங்கள், 5 கட்டங்களாக தேர்தல்கள் நடக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரேகட்டமாக, ஒரே நாளில் 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதை தவிர முதல் கட்ட தேர்தல் முடிந்து தேர்தல் எண்ணிக்கைக்கான நாட்கள் மிக நீண்டு 46 நாட்களாக இருப்பதும் பல்வேறு ஐயங்களை கிளப்புகிறது. எதற்காக இவ்வளவு பெரிய இடைவெளி.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று முழங்குபவர்கள் குறைந்தபட்சம் நாடு முழுவதும் 3 கட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க முடியாதா. அதற்குரிய அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளனவே என்றும் தேர்தல் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவை அனைத்தும் தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற அச்சத்தை மக்கள் மனதில் எழச் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் சுயமாக, சுதந்திரமாக இயங்காமல், யாரோ சிலரின் ஆலோசனைப்படி செயல்படுகிறதா என்கிற குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் தான் வெளிப்படையாக விடை கூற வேண்டும். இல்லாவிட்டால் அது ஜனநாயகத்தின் கரும் புள்ளியாகி விடும்.