போபால்: மத்தியப் பிரதேச பணியாளர் தேர்வாணையத்தால் ஏப்ரல் 26 அன்று நடத்தப்பட்ட வருவாய்த்துறை ஊழியர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து போபால், இந்தூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் வேலையற்ற இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில்,’ பாஜ ஆளும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து இன்னொரு ஊழல் செய்தி வருகிறது லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜ அரசு ஏன் இருட்டில் தள்ளுகிறது?’ என்று கேள்வி எழுப்பினார். ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில்,’ மத்தியபிரதேசத்தில் முதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பா.ஜ திருடியது. இப்போது அது மாணவர்களிடமிருந்து அவர்களின் உரிமைகளையும், இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பையும் திருடுகிறது’ என்று டிவிட் செய்துள்ளார்.