பெரம்பூர்: புளியந்தோப்பு ஸ்டாரன்ஸ் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த புஷ்பக் (50) வசித்து வருகிறார். இவரது மனைவி நித்தா (46). இவர்களுக்கு துர்வா (22) என்ற மகன் உள்ளார். புஷ்பக், மண்ணடியில் இரும்பு வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 15 நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட புஷ்பக் வீட்டில் இருந்து வெளியே வராமல் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலை 9 மணி அளவில் மகன் துர்வா அலுவலகம் சென்றுள்ளார். மனைவி நித்தா கோயிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது 8வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் வழியாக புஷ்பக் கீழே குதித்துள்ளார். பலத்த சத்தம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் மதுரை முத்து என்ற செக்யூரிட்டி அதிகாரி, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் வருவதற்குள் அங்கிருந்வர்கள் அவரை காரில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு புஷ்பக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் கடந்த 15 நாட்களாகவே டெங்கு காய்ச்சலால் புஷ்பக் அவதியுற்று வந்ததும் இதனால் மன உளைச்சலில் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து வேறு ஏதாவது தொழில் ரீதியான பிரச்னை உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.