சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மணிப்பூர் பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு பிரதமர் மோடி ஆட்சியில் எந்த தண்டனையும் வாங்கி தரவில்லை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எதிர்க்கட்சிகளின் தலைமையிலேயே ‘சிறப்பான ஒரு ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது. எனவே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். தமிழ்நாடு கவர்னர் எவ்வளவு அநாகரிகமானவர், அராஜகமானவர், அவர் ஆர்எஸ்எஸ்சை விடவும் தீவிரமானவர் என்பதை அவர் கூறும் வார்த்தைகள் நிரூபித்துள்ளன.
கவர்னர் இதுபோன்று பேசுவது தவறான செயலாகும். தமிழ்நாட்டு காவல் துறையைக் கொண்டு, வன்முறை ஏற்படுத்தும் விதத்தில் வரம்பு மீறி பேசியதற்காக கவர்னரை கைது செய்யவும், தமிழ்நாட்டு அரசுக்கு உரிமை உண்டு. கவர்னரின் நடவடிக்கை அனைத்தும் தவறாகவே உள்ளது. அதனால் தான் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்திற்கு வர மாட்டோம் என்று புறக்கணித்தோம். நாங்கள் வரமாட்டோம்.
அண்ணாமலை செல்வது ‘பாதி யாத்திரை’
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் முறியடிக்க வேண்டியது பாஜவையும், அதிமுகவையும் தான். புலியை பார்த்து பூனை கோடு போட்டுக் கொண்டது போல் அண்ணாமலை பாத யாத்திரை சென்றுள்ளார். அவர் செல்வது பாதயாத்திரை இல்லை பாதியாத்திரை. இந்த நடைபயணம் முடியும் பொழுது அண்ணாமலை இருக்க மாட்டார். ஏனென்றால், கர்நாடக மாநிலத்தில் அவர் எஸ்பியாக இருந்தபோது செய்த ஊழலுக்காக கர்நாடக காவல்துறை அவரை கைது செய்ய காத்திருக்கிறது. அதிமுக மற்றும் பாஜவை ஓட ஓட விரட்ட வேண்டும் என்ற உறுதிமொழியை சுதந்திர தினத்தில் அனைவரும் ஏற்க வேண்டும்’’ என்றார்.