நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே இன்ஸ்டாகிராமில் பழகி பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் காலடி பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவரது நண்பர்கள் அகிலேஷ்சாபு, ஜிதின் வர்க்கீஸ், பூர்ணிமா தினேஷ், சுருதி சித்தார்த். அஜின்சாம் சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பிளஸ் 1 மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகினார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
கடந்த 17ம் தேதி இரவு காரில் களியக்காவிளை வந்த அஜின் சாம், அவரது நண்பர்கள் மாணவியை உடன் அழைத்து சென்றனர். பின்னர் அவரை நெய்யாற்றின்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்தனர். அங்கு அஜின்சாம் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் அந்த மாணவியை அவரது வீட்டிற்கு அருகே விட்டுவிட்டு அனைவரும் தப்பினர். மறுநாள் முதல் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. சந்தேகம் அடைந்த மாணவி குடும்பத்தினரிடம் விபரத்தை தெரிவித்து உள்ளார். அவர்களின் புகாரின்படி பாறசாலை போலீசார் விசாரணை நடத்தி எர்ணாகுளம் காலடியில் இருந்து அஜின்சாம், அவரது நண்பர்கள் அகிலேஷ் சாபு, ஜிதின் வர்க்கீஸ், பூர்ணிமா தினேஷ், சுருதி சித்தார்த் ஆகியோரை கைது செய்தனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இவர்கள் தங்கள் கும்பலில் இளம்பெண்களையும் அழைத்து சென்று வருகின்றனர். இதேபோன்று வேறு பெண்களையும் இவர்கள் திருமண ஆசை காட்டி வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்தார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.