விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு
சர்வதேச, தேசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனையர், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற, தமிழக வீரர் – வீராங்கனையரை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். 2018 ஜனவரி முதல் சர்வதேசப் போட்டிகள், கோடைக்கால ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகள், ஆசியப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சர்வதேசப் பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம், காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றோரும், வெற்றி பெற்றோரும், தேசிய விளையாட்டுப் போட்டிகள், தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றோரும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த அனைத்து தகுதிகளுடன் 40 வயதிற்கு உட்பட்டோராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அக்டோபர் 31ம் தேதிக்குள் இணையதளம் வழியாகவோ, சென்னை தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.