தமிழக மக்கள் கேப்டன் என்று கொண்டாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ம்தேதி காலமானார். இறப்புச்செய்தி கேட்ட அதிகாலை நேரத்திலேயே, ெசன்னையில் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு திரண்டனர் ஆயிரமாயிரம் மக்கள். அங்கிருந்து உடல் விஜயகாந்த் வாழ்ந்த சாலிகிராமம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாற்றுக்கட்சி தலைவராக இருந்தாலும் தனது மனதுக்கு இனிய நண்பரின் மறைவால் கலங்கினார் தமிழக முதல்வர். ஒட்டுமொத்த தமிழ்மக்களின் முதல் பிரதிநிதியாக அவரது வீட்டுக்கு சென்று கருணையோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
‘‘தமிழ் உணர்வும், தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் உடன், கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. அவருடனான நட்பு எந்தக்காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவே இல்லை. இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது. அவரது மறைவு தமிழ்நாட்டிற்கும், திரையுலகிற்கும் பேரிழப்பாகும். மிகத்துயரமான இந்தச்சூழலில் என்னை நானே தேற்றிக்கொண்டு அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப்பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்,’’ என்ற அவரது அறிவிப்பு, சோகத்தில் தத்தளித்த இதயங்களுக்கு அத்துணை ஆசுவாசமாக இருந்தது.
இது ஒருபுறமிருக்க மக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கும் மக்கள் திரண்டதால் தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது. மீண்டும் கட்சி அலுவலகத்திற்கே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த வகையில் 28ம் தேதி அதிகாலை தொடங்கி மறுநாள் மாலை வரை சுமார் 37 மணி நேரம் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைத்து அரசியல்கட்சி தலைவர்கள், திரைப்பட கலைஞர்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட பொதுமக்கள் என்று சுமார் 15லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஆனால் எந்த ஒரு அசம்பாவிதமோ, சர்ச்சை நிகழ்வுகளோ, அதிருப்தி குரல்களோ இல்லை. மாறாக அஞ்சலி செலுத்திய மனங்கள் அனைத்தும் ெநகிழ்ந்து பாராட்டிய ஒரே விஷயம் முதல்வர் முன்னின்று முடுக்கி விட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து ஏற்பாடுகள்தாம். அஞ்சலி தொடங்கி நல்லடக்கம் வரை ஒவ்வொன்றையும் நேர்த்தியாக செய்திருந்தனர் அதிகாரிகள். 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்
பட்ட கடைசி நேரத்திலும் கலங்கிய விழிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதற்கடுத்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ‘‘எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே’’ என்பதாகும். 5 முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் காலமான நாளில் அவரது உடலை நல்லடக்கம் செய்யும் நேரத்தில் ஆளுங்கட்சியினர் செய்த அரசியல் இந்த நாடறிந்தது. ஆனால் மாற்றுக்கட்சி தலைவர் என்ற மனப்பான்மை எள்ளளவும் இல்லாமல், சோகம் சூழ்ந்து நின்ற நேரத்தில் நட்புக்கரம் நீட்டி கருணையோடு பிரியாவிடை கொடுத்திருக்கிறார் முதல்வர். இந்தவகையில் முதல்வர் வடித்துள்ள புதிய அரசியல் நாகரிகமும் அரசியல் சரித்திரமும் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் என்பது நிதர்சனம்.