சென்னை: இந்தியாவில் சிறந்த புத்தொழில் சூழல் கொண்ட மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் சிறந்த செயல்பாட்டாளர் என்ற முதல் இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ 2022க்கான சிறந்த புத்தொழில் சூழமைவினை கட்டமைக்குமாறு செயல்படும் மாநிலங்களின் தரவரிசைப்பட்டியலை ஜன.16ம் தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது. இதில், தமிழ்நாடு முதல் தரவரிசை இடமான ‘சிறந்த செயல்பாட்டாளர்’ பிரிவில் மாநிலத்தில் சிறப்பான புத்தொழில் செயல்பாடுகளுக்காக அங்கீகரிக்கப்பட்டு இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த 2021ல் தரவரிசைப்பட்டியலில் மூன்றாவது இடமான லீடர் இடத்தை தமிழ்நாடு பிடித்திருந்தது, தற்போது இரண்டு நிலைகள் முன்னேறி நாட்டின் புத்தொழில் சூழமைவில் சிறப்பாக செயல்படும் மாநிலம் என்று முதல் தரவரிசை இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி, தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதி, தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான ஆதார நிதி,புத்தாக்க பற்று சீட்டுத்திட்டம் ஆகிய நிதித்திட்டங்களை செயல்படுத்துதல், தொழில் வளர் காப்பகங்களை சிறப்பாக ஒருங்கிணைப்பதன் மூலம் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுதல், பசுமைத்தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு ஆகியவை சார்ந்து இயங்கும் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கான சிறப்புத்திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவை தமிழ்நாட்டின் மிக சிறப்பான செயல்பாடுகளாக ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான ஆதரவு, நிதி உதவி, செயல்பாட்டாளர்களுக்கு திறன் மேம்பாடு அளித்தல் ஆகிய செயல்பாடுகளில் 100 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது தமிழ்நாடு. மேலும், தொழில் வளர் காப்பகங்களுக்கு ஆதரவு அளித்தல், தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல்கள் வழங்குதல் ஆகிய செயல்பாடுகளில் 94 சதவீத புள்ளிகளையும், நிலையான எதிர்கால வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமான செயல்பாடுகளுக்கு 75 சதவீத புள்ளிகளையும் பெற்றுள்ளது.
தமிழக தொழில்துறை செயலாளர் அருண்ராய், சிறு,குறு, நடுத்தரதொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க நிர்வாக இயக்குநர் சிவராஜா ராமநாதன், அலுவலர்கள் தினேஷ் குமார், சிவக்குமார், அனீஸ் ஆகியோர் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலிடமிருந்து சான்றிதழை பெற்றனர். மேலும், ஸ்டார்ட் அப் இந்தியாவின், 2023க்கான தேசிய புத்தொழில் விருதுகள் போட்டியில், நிலைத்த வளர்ச்சிக்கான முன்னோடி புத்தொழில் நிறுவனங்கள் பிரிவில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த கிரீன் வைரோ குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த அட்சுயா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புத்தாக்க பிரிவில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
* முதல்வர் பெருமிதம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018ல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022ம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது. TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 7600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022ம் ஆண்டில் மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், அதிகாரிகளுக்கு எனது பாராட்டுகள். இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்.