Sunday, May 19, 2024
Home » இந்திய அணிக்கு தேர்வானது தினம்தோறும் நான் கண்ட கனவு: இளம் வீரர் திலக் வர்மா நெகிழ்ச்சி

இந்திய அணிக்கு தேர்வானது தினம்தோறும் நான் கண்ட கனவு: இளம் வீரர் திலக் வர்மா நெகிழ்ச்சி

by Mahaprabhu

ஐதராபாத்: ஒவ்வொரு நாள் இரவும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்குவது போல் கனவு காண்பேன் என்றும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு விரைவில் நனவாகும் என்றும் திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் கூறினார். டி20 ஐபிஎல் தொடரின்போது மும்பை அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் இளம் வீரர் திலக் வர்மா. இதைத்தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, “இளம் வீரர் திலக் வர்மா 3 வகையான கிரிக்கெட்டுக்கான வீரராக உள்ளார். இன்னும் சில நாட்களில் அவரை வேறு ஜெர்சியில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது’’ என்று கூறி இருந்தார். அதன்படியே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாத மிடில் ஆர்டர் பிரச்னைக்கு இந்திய அணி தீர்வை கண்டுபிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் திலக் வர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 164 ஆக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அஜிங்கியா ரஹானே மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே அதற்கு மேல் ஸ்ட்ரைக் வைத்துள்ளனர். இதனால் இந்திய அணிக்கு திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டதில் பெரிய ஆச்சரியம் இல்லை. இதுகுறித்து திலக் வர்மா கூறுகையில், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்று அறிந்த பின், என் தாய்-தந்தை இருவரும் வீடியோ காலில் அழைத்து ஆனந்தகண்ணீருடன் பேசியது உணர்வுப்பூர்வமாக அமைந்தது. நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்பதை என் சிறு வயது நண்பரே முதலில் கூறினான். அதன்பின்னரே எனக்கு தெரிய வந்தது.

ஐபிஎல் தொடரின் போது ரோகித் சர்மா, சச்சின் சார் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஏராளமான ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக நான் சிறந்த ஃபார்மில் இருப்பதாகவும், இன்னும் உடலோடு பேட்டிங் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள். அதேபோல் பயிற்சியின் முக்கியத்துவத்தை மூவருமே கூறினார்கள். ஒவ்வொரு நாள் இரவும் உலகக்கோப்பைத் தொடரில் பேட்டிங் செய்ய களமிறங்கினால் எப்படி இருக்கும் என்று கனவு காண்பேன். ஒரு வேளை இந்திய அணி 40 முதல் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்த பின் நான் களமிறக்கப்பட்டால், எப்படி விளையாட வேண்டும் என்று சிந்திப்பேன். அதுதான் எனக்கு உதவியாக உள்ளது. என் சிறுவயது கனவு ஒன்றே ஒன்றுதான். இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும். அது விரைவில் நனவாகும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

You may also like

Leave a Comment

six − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi