Wednesday, May 29, 2024
Home » மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை இந்தியா இந்த வாரம் மிஞ்சும்: ஐநா மாறுபட்ட தகவல்

மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை இந்தியா இந்த வாரம் மிஞ்சும்: ஐநா மாறுபட்ட தகவல்

by Ranjith

ஐக்கிய நாடுகள்: ‘மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை இந்தியா இந்த வாரம் மிஞ்சி உலகின் நம்பர் -1 இடத்தை கைப்பற்றும்’ என ஐநா மாறுபட்ட புதிய தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள் தொகை நிதியம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை விட இந்தியா 29 லட்சம் அதிக மக்கள்தொகையுடன் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறும் என அறிவித்தது. ஆனால் உடனடியாகவே ஐநாவின் உலக மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் பட்டியலில் இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகவும் குறிப்பிடப்பட்டதால், இந்தியா நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

இந்நிலையில், ஐநாவின் மற்றொரு அமைப்பான பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறையின் மக்கள் தொகை பிரிவு மாறுபட்ட தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. இதன் இயக்குநர் ஜான் வில்மோத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்கள்தொகையை மதிப்பிடுவது மற்றும் கணிப்பதில் நிச்சயமற்ற நிலை காரணமாக சீனாவை இந்தியா எப்போது மிஞ்சும் என்பதை துல்லியமாக கூற முடியாது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, இந்த வாரம் சீனாவை இந்தியா முந்தி நம்பர் 1 இடத்தை பிடிக்கும். அதே சமயம், 2024ம் ஆண்டு இந்தியா தனது மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்ட பின் இந்த கணக்குகள் அனைத்தும் திருத்தத்திற்கு உட்பட்டது.

அப்போது இந்தியா மக்கள் தொகையில் நம்பர் 1 இடத்தை பிடித்த மாதம் நிச்சம் ஏப்ரலாக இருக்காது என்பது எனது கணிப்பு. சீன மக்கள் தொகை கடந்த ஆண்டு முதல் குறையத் தொடங்கி உள்ளது. இதுவே இந்தியாவில் 2064ம் ஆண்டுக்குப் பிறகு நிலையானதாக இரக்கும். 2050ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

* குழப்பம் ஏன்?
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா, சீனாவை மிஞ்சிவிட்டதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் மாறுபட்ட கணிப்புகள் வெளியிடப்பட்டிருப்பது குறித்து ஜான் வில்மோத் கூறுகையில், ‘‘தகவல் தொடர்பு தெளிவாக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது’’ என்றார். 2021ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இது கொரோனா காரணமாக அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே 2024ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்ட பின்னரே தெளிவான கணக்குகள் தெரியவரும்.

You may also like

Leave a Comment

three × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi