Sunday, June 9, 2024
Home » இந்தியா என்றாலும் பயம்

இந்தியா என்றாலும் பயம்

by Karthik Yash

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க ஒன்றியத்தை ஆளும் பாஜ கட்சிக்கு, மரண பயத்ைத காட்டி உள்ளது எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி மும்பையில் நடந்த 3வது கூட்டத்தில், கூட்டணியில் போட்டியிடும் இடங்களை விரைந்து தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாஜ ஆட்சி மீண்டும் வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே, ‘இந்தியா’ கூட்டணி உருவானதாக கூட்டணியின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயர் வைத்ததிலிருந்தே, பாஜவுக்கு இந்தியா என்றாலே ஒருவித அலர்ஜி போல ஆகி விட்டது. கிழக்கிந்திய கம்பெனி என்று கூட பெயர் இருந்தது என்பது உள்பட பல்வேறு அவதூறு விமர்சனங்களை முன் வைத்தது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் கோஷம், சனாதனம் என பல விஷயங்களை கையிலெடுத்து அரசியல் செய்கிறது பாஜ. ‘ஆட்டை கடித்து மாட்டை கடித்த கதையாக’ கடைசியில், இந்திய நாட்டின் பெயரையும் மாற்றி விடலாமா என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக ஜி-20 அழைப்பிதழில் ‘பிரசிடென்ட் ஆப் இந்தியா’ என குறிப்பிடாமல், ‘பிரசிடென்ட் ஆப் பாரத்’ என அச்சிடப்பட்டுள்ளது நாட்டு மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 18ம் தேதி துவங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இதற்காக அரசியலமைப்பு திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒருபுறம் ‘புறாவுக்கு ேபாரா’ என்பது போல, எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயருக்கு அஞ்சி, நாட்டின் பெயரையே மாற்ற எண்ணுவதா என எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி, வீரேந்திர சேவாக் மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் உள்பட பல விஐபிக்கள் பெயர் மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாஜ அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களும் தங்களது வலைத்தள முகப்புகளில் ‘பாரத்’ என்றே குறிப்பிட தொடங்கியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை ஒரிசா என்பது ஒடிசா என மாற்றப்பட்டது உள்பட சில மாநிலங்களின் பெயர்கள் மாற்றமடைந்திருக்கின்றன. மெட்ராஸ் என்பது சென்னை, பெங்களூர் என்பது பெங்களூரூ என நகரங்களும் மாறியிருக்கின்றன. ஆனால், சர்வதேச அளவில் தனது வல்லமையை நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் பெயரை மாற்ற எண்ணுவதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகும். இந்திய நாட்டின் ரூபாய் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்கள், ஆவணங்கள் உள்பட பல விஷயங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.

இதற்கே பல லட்சம் கோடிகளை ஒன்றிய அரசு செலவழிக்க வேண்டியிருக்கும். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்பட முக்கிய ஆவணங்களில் பெயர் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அடுத்தடுத்த வளர்ச்சி என்ற கட்டத்தில் நாடு நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் பெயர் மாற்றம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. மோசமான ஒன்றாகவே அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள், பொருளாதார வல்லுனர்கள். மக்கள் விரோத சட்டங்களையே கொண்டு வந்து குரல்வளையை நெரிக்கும் ஒன்றிய பாஜ அரசு, இதுபோன்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதே நாட்டு மக்களின் ஒருமித்த கருத்தாகும்.

You may also like

Leave a Comment

ten − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi