சென்னை: இந்தியாவிலேயே அயலக தமிழர் அணியை தொடங்கிய ஒரே கட்சி தி.மு.க.தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் அயலகத் தமிழர் தின விழா நடைபெற உள்ளது. 3-ம் ஆண்டாக தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடைபெறுகிறது. அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசினார். அப்போது, இந்தியாவிலேயே அயலக தமிழர் அணியை தொடங்கிய ஒரே கட்சி தி.மு.க.தான். அயலகத் தமிழர் நலனில் திமுக அரசு அக்கறையோடு செயல்படுகிறது. உலகமெங்கும் வசிக்கின்ற தமிழ் மொழி பேசும் அனைவருக்கும் உழைத்தவர் கலைஞர். அயலக தமிழர் நலனுக்காக திமுக அரசு பல நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. முன்பை விட தமிழர்கள் இப்போது வெளிநாட்டில் அதிகம் வாழ்கின்றனர். பல்வேறு நாடுகளில் படிப்பு, பணிக்காக தமிழர்கள் சென்றுள்ளனர். 135 நாடுகளில் தமிழர் வாழ்கிறார்கள்… தமிழர் இல்லாத நாடே இல்லை.
உலகின் எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழ் பேசுபவர்களை காண முடிகிறது. ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடுகளுக்கு சென்று ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். வெளிநாடு செல்லும் வாய்ப்பை அயலக தமிழர் நலத்துறை ஏற்படுத்தி தருகிறது. உக்ரைன் – ரஷ்யா போரில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களை பத்திரமாக மீட்டோம். அயலக நல வாரியம் மூலம் சட்டப்பூர்வமாக வேலைவாய்ப்பை வழங்கி வருகிறோம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இந்த துறையானது உடனடியாக தீர்க்கும். வெளிநாட்டில் இறந்து போகும் தமிழர்களின் உடல் 8 நாட்களுக்குள் தமிழகம் கொண்டுவரப்படுகிறது என்று குறிப்பிட்டார்.