திருவனந்தபுரம்: இந்தியா என்ற குடும்பத்தை பா.ஜ. தகர்த்துக்கொண்டிருக்கிறது என்று வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். மோடி சமுதாயத்தைக் குறித்து அவதூறாக பேசியதாக ெதாடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் ராகுல் காந்திக்கு எம்பி பதவி மீண்டும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி வயநாட்டுக்கு நேற்று வந்தார். கல்பெட்டாவில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு எம்பி நிதியின் கீழ் கட்டப்பட்ட 9 வீடுகளுக்கான சாவிகளை அவர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் பேசியதாவது:
என்னை தகுதி நீக்கம் செய்ய பா.ஜ., 100 முறை முயன்றாலும் மோடி மற்றும் அவரது கூட்டாளிகளின் திட்டம் பலிக்காது. குடும்பங்களை தகர்க்கும் அரசியலை தான் பா.ஜ. செய்து வருகிறது. இந்தியா என்ற குடும்பத்தை தான் பா.ஜ. தகர்த்துக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அவர் (மோடி) 2 மணி 13 நிமிடங்கள் பேசினார். அவர் சிரித்தார். அவர் கேலி செய்தார். அவரது அமைச்சரவை சிரித்தது, கேலி செய்து சிரித்தது. அவர்கள் மிகவும் வேடிக்கையாக இருந்தனர். ஆனால் மணிப்பூரைப் பற்றி இரண்டு நிமிடம் மட்டுமே பேசினார். மணிப்பூரில் பா.ஜவும், அதன் தலைமையிலான அரசும் இந்தியா என்ற எண்ணத்தை கொன்றுவிட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்களை அழித்துவிட்டீர்கள்.
ஆயிரக்கணக்கான பெண்களை பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளீர்கள். அங்கு அப்படி நடந்த பிறகு நாட்டின் பிரதமராக நீங்கள் சிரிக்கிறீர்களா?. இந்தியா என்ற கருத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக இருக்க முடியாது. பாரத மாதா கொலையைப் பற்றி இரண்டு நிமிடம் பேசினீர்கள். இந்தியா என்ற எண்ணத்தை நீங்கள் எப்படி நிராகரிக்க முடியும்?. கடந்த நான்கு மாதங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நீங்கள் ஏன் அங்கு செல்லவில்லை? ஏன் வன்முறையைத் தடுக்க முயற்சிக்கவில்லை? ஏனென்றால் நீங்கள் ஒரு தேசியவாதி இல்லை. இந்தியா என்ற எண்ணத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.