புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாட புத்தகங்களை உருவாக்குவதற்காக என்சிஇஆர்டி 19 பேர் கொண்ட புதிய குழுவை நியமித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வழிகாட்டல் குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்புடன் புதிய பாட புத்தகங்களை உருவாக்குவதற்கு 19 பேர் கொண்ட குழுவை என்சிஇஆர்டி அமைத்துள்ளது.
இந்த குழுவில், இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன், பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர, ஏற்கனவே என்சிஇஆர்டி புத்தகங்களை திருத்த அமைக்கப்பட்ட குழுவில் இருந்த 16 உறுப்பினர்களும் புதிய குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் தலைவர் எம்.சி. பண்ட் தலைமையிலான இந்த குழு 3 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்களை உருவாக்கும். சமீபத்தில் என்சிஇஆர்டி புத்தகங்கள் சில பகுதிகள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதிய பாட புத்தகங்கள் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.