பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு, தண்ணீர் வரத்து குறைந்தாலும், அங்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகள் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர்
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தொடர்ந்து சில வாரமாக பெய்த தென்மேற்கு பருவ மழையால், ஆழியார் அருகே உள்ள கவியருவியில் தண்ணீர் அதிகளவு கொட்டியது. இதனால், தினமும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதில் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை மற்றும் முக்கிய விடுமுறை நாட்களில் கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஆனால், ஆழியார் பகுதியில் தற்போது மழையின்றி வெயிலின் தாக்கமே அதிகமாக காணப்பட்டது. இதனால், கவியிருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
இந்நிலையில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தாலும், விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களிலும் வெளியூர் சுற்றுலா பயணிகள் ஓரளவு உள்ளது. கவியருவியில் பெரிய அளவில் சுற்றுலா பயணிகள் இல்லாததால், பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில், வெகுநேரம் ஆனந்த குளியல் போட்டுச் செல்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மிகவும் குறைவால் கவியருவியில் கொட்டும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது, கவியருவியில் ஓரளவு தண்ணீர் கொட்டும் வரை, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.