புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டம் (யுஎன்டிபி) 2024ம் ஆண்டிற்கான ஆசிய பசிபிக் மனித மேம்பாட்டு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை நீண்ட கால முன்னேற்றம் இருப்பதை சுட்டிக் காட்டிய அதே வேளையில் தொடர்ச்சியான பணக்காரர், ஏழை ஏற்றத்தாழ்வு நிலவுவதை குறிப்பிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில், 2000ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தனிநபர் வருமானம் ரூ.36,244 என்பதில் இருந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், 2015-16 மற்றும் 2019-21க்கு இடைப்பட்ட காலத்தில் வறுமையில் வாழும் மக்களின் பங்கு (சர்வதேச வறுமை அளவீடுகளின்படி ஒருநாளுக்கு ரூ.177 வருமானம் ஈட்டுவோர் என்கிற அடிப்படையில்) 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக சரிந்துள்ளது.
ஆனாலும், நாட்டின் மக்கள்தொகையில் 45 சதவீதம் பேர் வசிக்கும் மாநிலங்களில் வறுமை தொடர்ந்து குவிந்துள்ளது. அங்கு தான் 62 சதவீத ஏழைகள் வாழ்கின்றனர் என்பதை அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது.
முக்கியமாக 2000க்குப் பிறகு உலகம் முழுவதும் பணக்காரர், ஏழை ஏற்றத்தாழ்வு அதிகளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், நாட்டின் மொத்த வருமானத்தில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டதை 10 சதவீத பணக்காரர்கள் பெறுகின்றனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.