பெரம்பூர்: சென்னையில் குற்றச்செயல்களை தடுக்கவும், ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், வடசென்னை மற்றும் சோழவரம் பகுதியில் கெத்து காட்டிய முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இரண்டு ரவுடிகள் போலீசாரால் சமீபத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, தற்போது ரோந்து செல்லும் போலீசார் கண்டிப்பாக துப்பாக்கிகளுடன் செல்லுமாறு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, சென்னையில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் காவல் மாவட்டங்களில் ஒன்றான புளியந்தோப்பு சரகத்திலும் போலீசார் துப்பாக்கிகளுடன் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
போலீஸ் வாகனத்தில் சென்றால் குருகலான சாலைகளில் செல்ல முடியாது என்ற காரணத்தால் போலீசார் இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் செல்லுமாறு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். காவல் நிலையங்களில் உள்ள உதவி ஆய்வாளர்கள் 9 எம்எம் என்ற சிறிய ரக துப்பாக்கியுடனும், அவருடன் செல்லும் போலீசார் 303 ரக பெரிய துப்பாக்கியுடனும் ரோந்து செல்ல ஆரம்பித்துள்ளனர். 9 எம்எம் துப்பாக்கி என்பது 15 மீட்டர் வரை சுடும் திறன் படைத்தது. ஆனால் 303 ரக துப்பாக்கி சுமார் 300 மீட்டர் வரை சுடும் அளவிற்கு திறன் படைத்தது. இது பெரிய அளவில் சற்று கனமாக இருக்கும். இந்த துப்பாக்கியை தங்களது தோளில் மாட்டியபடி போலீசார் எடுத்து செல்கின்றனர். இதை பார்க்கும் ரவுடிகளுக்கு ஒருவிதமான அச்ச உணர்வும் பொதுமக்களுக்கு போலீசார் மீது ஒருவிதமான நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் கூறியதாவது:
போலீசார் ஆயுதங்களுடன் செல்லும்போது தவறு செய்பவர்களுக்கு இது ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும். நாம் தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் அவர்கள் நடத்துவார்கள் என அவர்களுக்கு தெரிந்தால் கண்டிப்பாக இது ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தும். இதற்கு முன்பு சில இடங்களில் போலீசாரே சிறிய அளவிலான தாக்குதல்களில் சிக்கி உள்ளனர். ரவுடிகள் ஆயுதங்களுடன் வரும்போது போலீசார் அவர்களை கையாள்வது சற்று சிக்கலான விஷயமாக இருக்கும். தற்போது போலீசார் துப்பாக்கியுடன் செல்லும்போது 10 பேர் இருந்தால் கூட எளிதாக அவர்களை பிடித்து விடலாம். கொலை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கையாள்வதும் எளிதாக இருக்கும். ஒரு குற்ற செயல் ஒரு இடத்தில் நடைபெறுகிறது என்றால் உடனடியாக அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று துப்பாக்கியுடன் திரும்பி வருவது சற்று சிரமமாக இருக்கும். ஆனால் தற்போது ஆயுதங்களை எடுத்து செல்லும்போது சில குற்றச் செயல்களை அவர்களால் தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோன்று துப்பாக்கிகளை எவ்வாறு கையாள வேண்டும், சிறிய ரக துப்பாக்கிகளை எவ்வாறு இடுப்பில் பத்திரமாக வைக்க வேண்டும் என்பது குறித்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.