சென்னை: அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவி தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம், என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவியருக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login சென்று, ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்யவேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும். கல்வி உதவித்தொகை இணையதளம் (ஸ்காலர்ஷிப் போர்டல்) புதுப்பித்தலுக்கு (ரெனிவல்) வருகிற 18ம் தேதி முதல் செயல்பட துவங்கும்.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மாணவர்களால் அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தையோ அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.