கவுகாத்தி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயற்சித்ததாக கவுகாத்தி ஐஐடி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹாரீஸ் பரூக்கி, அவரது கூட்டாளி அனுராக் சிங் என்ற ரெஹான் ஆகியோர் வங்கதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய அண்மையில் முயன்றனர். அப்போது இருவரும் அசாம போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கவுகாத்தி ஐஐடி மாணவர் ஒருவர்,ஐஎஸ்எஸ்சில் சேர போவதாக இமெயில் அனுப்பியது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கவுகாத்தி ஐஐடிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் அங்கிருந்து மாயமானது தெரியவந்தது. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இறுதியில் ஹாஜோ என்ற இடத்தில் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து,கூடுதல் எஸ்பி கல்யாண் குமார் பதக், ‘‘அந்த மாணவரை சிறப்பு புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்து வந்து இமெயில் அனுப்பியதற்கான நோக்கம் குறித்து விசாரித்தோம்.விடுதி அறையை சோதனையிட்ட போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய கறுப்பு கொடி இருந்தது. அறையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றி விசாரணை நடக்கிறது. பிடிப்பட்ட மாணவர் டெல்லியை சேர்ந்தவர்’’ என்றார்.