சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பளம் வழங்கப்படும் என ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து, ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, மாநில அரசின் நிவாரண பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொடுக்க விரும்புகிறோம்.
இது தொடர்பாக சம்பளம் மற்றும் கணக்குதுறை அதிகாரிகள், கருவூலகத்துறை அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபோல, தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியம் புயல் நிவாரணமாக தமிழ்நாடு அரசிடம் வழங்கப்படும் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு தலைவரும், டிஜிபியுமான ஆபாஷ்குமார் அறிவித்துள்ளார்.
மேலும், புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்கும் பணிக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க உள்ளதாக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் ரூ.1 கோடியே 50 லட்சத்து 30 ஆயிரம் வழங்கியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.