திருமலை: ஐதராபாத் காஜிப்பேட்டை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் அருகில் காலியாக நின்றிருந்த ரயில் பெட்டிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் காஜிப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று ரயில் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சில நொடிகளில் தீ மளமளவென பரவி அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிகளில் தீப்பிடித்தது.
இதனை பார்த்து பீதியடைந்த பயணிகள் ரயில் நிலையத்தை விட்டு அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ‘ரயில் நிலையத்தில் நடைமேடைக்கு அருகில் காலியாக பெட்டிகள் நிறுத்தி வைக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயிலில் இருந்த நிலக்கரி தீப்பிடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலியாக இருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது’ என்றனர்.