Sunday, May 26, 2024
Home » ஒவ்வொரு செயலிலும் மனிதநேயம்..எதற்கும் அஞ்சாத துணிச்சல்.. எளியோருக்கு நீளும் உதவிக்கரம்: விஜயகாந்த் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

ஒவ்வொரு செயலிலும் மனிதநேயம்..எதற்கும் அஞ்சாத துணிச்சல்.. எளியோருக்கு நீளும் உதவிக்கரம்: விஜயகாந்த் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

by Kalaivani Saravanan

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் உடலைப்பார்த்து பிரேமலதா கதறி அழுதார். சென்னை சாலிகிராமத்தில் விஜயகாந்த் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

13 + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi