கம்பம், மே 26: கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி பொதுமக்கள் பேனர் வைத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபதாரமும் விதிக்கப்படும் என கம்பம் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கம்பம் நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் மக்கள் வரை வசிக்கின்றனர். நாள்தோறும் கம்பம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் கம்பத்திற்கு தங்களை அத்தியாவசிய தேவைகளுக்காக தினசரி வருகின்றனர்.
ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த கம்ப நகரில் அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்களால் பொது மக்களுக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக பல்வேறு தரப்பிலிருந்து ஆணையாளருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் கூறுகையில், ‘‘கம்பம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பாக மெயின் ரோட்டில் அனுமதி இன்றி பேனர் வைத்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், பேனர்கள் வைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுதுடன் அபதாரமும் விதிக்கப்படும்’’என்றார்.