வெளியில் புறப்படும்போது “பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வா…” என்று வீட்டில் சொல்வதுண்டு. வெளியில் சென்று எவ்வித தொல்லை, ஆபத்து ஏற்படாமல் வர வேண்டும் என்கிற அக்கறையில் சொல்வதுண்டு. ஆபத்துக்கள் விபத்துக்கள் வெளியில் மட்டும்தான் ஏற்படுமா என்ன? வீட்டுக்குள்ளேயும் ஆபத்துக்கள் நம்மையறியாமல் நிகழ்ந்துவிடுகின்றன. அதிலும் இதோ கோடை விடுமுறை வேறு வரவிருக்கிறது, குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி ஆடுவார்கள்.எனவே இவை குறித்து கவனம் கொள்ள வேண்டிய சில கியூட் எச்சரிக்கைகள்
*வீட்டுக்குள் ஏற்படுகின்ற விபத்துக்கள் நம்முடைய அஜாக்கிரதை, நிதான மின்மை, அவசர கதி இவைகளால் தான் பெரும்பாலும் ஏற்படுகின்றன.
*பெரும்பாலான வீடுகளில் வழவழப்பான மொசைக் தரைகள்தான் உள்ளன. தரையில் தண்ணீர், எண்ணெய் இவை சிந்தி விட்டால் உடனே துடைத்துவிட வேண்டும். வீட்டிலுள்ள நபர் அவசரமாக வந்து அதில் காலை வைத்துவிட்டால் தரையில் விழுந்து பலத்த அடிபட நேரிடும். பாத்ரூமில் சோப்பு தேய்த்து குளித்த பின்னர் சோப்பு நீரால் தரை வழ வழப்பாக இருக்கும். உள்ளே செல்லும் போது மெதுவாக, ஜாக்கிரதையாக நடந்து சோப்பு நீரை கழுவிவிட வேண்டும்.
*வீட்டுக்குள் பெரும்பாலும் ஆபத்துக்குள்ளாவது குழந்தைகள்தான். தவழும் குழந்தைகள் இருந்தால் தரையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாயில் போட்டுக் கொள்ளக் கூடிய சிறிய பொருட்கள், ஆணிகள், மாத்திரைகள் இவைகள் தரையிலிருந்தால் உடனே எடுத்து விடவேண்டும். தவழும் குழந்தைகள் இவைகளை வாயில் போட்டு முழுங்கி விடக்கூடிய அபாயம் உண்டு.
*ஓடுகிற குழந்தைகளிருந்தால் அவைகளை அவ்வப்போது கண் காணித்துக் ெகாண்டே இருக்க வேண்டும். சூடான வெந்நீர் இருக்கிற பாத்திரம், குழம்பு, சாம்பார் உள்ள பாத்திரம்
இவைகளை கவனக்குறைவாக வைத்து விட்டால் குழந்தைகள் அதில் கை வைக்க காயம் படக்கூடும். கூடுமானவரை குழந்தைகள் கண்ணில் படும்படி இவைகளை வைக்கக் கூடாது.
*மொட்டை மாடி இருந்தால் அங்கு கைக்குழந்தையை அழைத்து செல்லும் போது மாடியின் நடுவில் நின்று கொண்டு வேடிக்கை காட்ட வேண்டும். சுவர் ஓரமாகக் கைப்பிடி ஓரமாக நின்று குழந்தையை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதோ, கீழே எட்டிப் பார்ப்பதோ நிச்சயம் கூடாது. குழந்தை துள்ளி கைகளிலிருந்து நழுவிவிடக்கூடிய அபாயம் உண்டு. ஜாக்கிரதை!
* வீட்டு உபயோகத்திற்காக கத்தி, கத்தரிக்கோல் இவைகளை எடுத்து வரும் போது கையை தொங்கப்போட்டு வர வேண்டும். கையை நீட்டியபடி எடுத்து வந்தால் திடீரென்று யாராவது குறுக்கே வரும் பட்சத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்படுத்தக் கூடும்.
*உயரமான கட்டிலில் குழந்தை உட்கார்ந்திருந்தால் பக்கத்திலேயே யாராவது உட்கார்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும். ஞாபகமறதியாக எழுந்து போய் விடக் கூடாது. நாம் போனதும் குழந்தை இறங்கத் தெரியாமல் இறங்கி அடிபடக் கூடும்.
* தோட்டம் இருக்கிற வீடென்றால் வீட்டின் தரையில் சிறு பூச்சிகள், வண்டுகள் ஓடிக்கொண்டிருக்கும். இவைகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி விட வேண்டும். தரையில் குழந்தை படுத்திருந்தால் இவைகள் காதுகளில் நுழைந்து விடுகிற அபாயம் உண்டு.
*கட்டில் மீதோ, ஸ்டூல் மீதோ ஏறி நின்று கையைத் தூக்கினால் பேன் பட்டு விடும் என்றால் ஃபேனை நிறுத்தி விட்டே அதன் மீது ஏறி நின்று வேலை செய்ய வேண்டும்.
*மாடிப்படிகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் வேக வேகமாக வருவதை தவிர்க்க வேண்டும். கால் இடறினால் பலத்த காயங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு.
*வீட்டினுள் எந்தவித விபத்துக்களும் ஏற்படாமலிருக்க நிதானம், ஜாக்கிரதை, பொறுமை, கவனம் இவைகளை மனதில் நிறுத்தி செயல்படுவோம். வீட்டுக்குள் விபத்துக்கள் ஏற்படாத வாறு பாதுகாப்புடன் வாழ்வோம்.
* ஒருசிலருக்கு தட்டையான கால்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு டைல்ஸ் தரைகள் வழுக்கும், அல்லது
வலிக்கும், இவர்கள் தயங்காமல் காலணிகள் பயன்படுத்துவது நல்லது. மேலும் தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்யும் போது எல்லோருமே இந்த காலணி பயன்பாட்டை கடைப்பிடிக்கலாம்.
*டூல்ஸ் பாக்ஸ், மெடிக்கல் கிட் உள்ளிட்டவை ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம்.
– த. சத்தியநாராயணன்