குமரி மாவட்டத்தில் முக்கியத் தொழிலாக விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதனை தவிர கால்நடை வளர்ப்பு தொழிலும் நல்ல வருமானத்தை பெற்றுக் கொடுக்கிறது. பிற மாவட்டங்களை போன்று இல்லாமல் குறைந்த கால்நடைகளை வளர்த்து அதிக லாபத்தையும் பெற்று வருகின்றனர். அந்தவகையில் நாகர்கோவில் அருகே உள்ள நாவல்காடு ஜவகர் தெருவில் ஒரு விவசாய குடும்பம் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாலைப்பொழுதில் ஆட்டுக்கொட்டகையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த கோலப்பன் அவர்களை சந்தித்து பேசினோம்.
‘‘எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் வாழை விவசாயம் செய்து வந்தோம். நல்ல வருமானம் கிடைத்தாலும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் 10 வருடத்திற்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சந்தையில் 6 ஆடுகளை ரூ.20 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்தேன். விவசாயத்தைப் பொருத்தவரை பலபயிர் சாகுபடி மூலம் அதிக லாபம் பார்க்க முடியும். அதுபோலத்தான் ஆடுவளர்ப்பிலும் நாங்கள் ஒரே ரக ஆடுகளை வளர்க்காமல் பல ரக ஆடுகளை வளர்க்கிறோம். நாட்டு ஆடு, வேலி ஆடு, செம்மறி ஆடுகள் என மூன்று இன ஆடுகள் உள்ளன. எனது மனைவி உமா, எனது மூத்த மகன் சிதம்பரம், இளைய மகன் நாகராஜன் ஆகியோரும் ஆடு வளர்ப்பில் உதவியாக இருக்கிறார்கள். தற்போது என்னிடம் 60 ஆடுகள் உள்ளன. இதில் 40 செம்மறி ஆடுகளும், 20 நாட்டு, வேலி ரக ஆடுகளும் உள்ளன.
நாட்டு ஆடு சிறியதாகவும், வேலி ஆடு உயரமாகவும், நீளமாகவும் இருக்கும். இந்த ஆடுகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல எட்டயபுரத்தில் 3 மாதங்கள் ஆன கிடா ஆட்டுக் குட்டிகளைத் தேர்வு செய்து வாங்கி வருகிறோம். இந்த ஆடுகள் ரூ.4 ஆயிரத்திற்கு கிடைக்கும். அவற்றை வாங்கி வந்து வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கட்டைகள் மூலம் பரண் அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறோம். இந்த பரண்களை தரையில் இருந்து மூன்று அடிக்கு மேல் உள்ளவாறு அமைத்திருக்கிறோம். பரண்மீது ஆடு வளர்ப்பதன் மூலம் கிருமி தாக்குதல் இருக்காது. ஆடுகளின் கழிவுகள் பரண் மேலே தேங்காமல் கீழே கொட்டி விடும். ஆட்டுக்கொட்டகையை 18 அடி உயரத்திற்கு ஆலோ பிரிக் கல் மூலம் அமைத்துள்ளோம். இதன்மேல் மெட்டல் சீட்டைப் போட்டு மூடி வைத்திருக்கிறோம். 600 சதுர அடியில் ஆட்டுக்கொட்டகையை அமைத்து அதிலே 60 ஆடுகளையும் வளர்த்து வருகிறேன்.
ஆடுகளை காலையில் 11 மணி அளவில் வீட்டில் இருந்து அருகில் உள்ள மலை அடிவாரத்திற்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்வோம். மேய்ச்சல் முடிந்து மாலை 5 மணிக்கு வீட்டிற்கு ஆடுகளை ஓட்டி வந்து மீண்டும் கொட்டகையில் அடைப்போம். ஆடுகளுக்கு என்று தனியாக எந்த தீவனமும் கொடுப்பதில்லை. மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும்போது அங்கு தேவையான பசுந்தீவனங்களை மேய்ந்துகொள்ளும். அங்கு ஓடும் கால்வாய்களில் தண்ணீர் காட்டுவோம். முழுக்க முழுக்க மேய்ச்சல் வளர்ப்பில் ஆடுகளை வளர்ப்பதன் மூலம் எங்களுக்கு தீவன செலவு அறவே இல்லை.
நாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவர்கள் மூலம் பிஆர்பி தடுப்பூசி போடுவோம். ஆடுகள் அனைத்தையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாது. உரிய நேரத்தில் கால்நடை மருத்துவர்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடுவார்கள். இதுபோக மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆடுகளுக்கு பூச்சி மருந்து கொடுப்போம். ஆட்டுப்பண்ணையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கழிவு மூலமே ஆடுகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும். இதனால் ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது கொட்டகையை சுத்தம் செய்து விடுவோம். ஆடுகளை மேய்ச்சலில் விட்டு வளர்ப்பதால் வயிறு உப்பசம், வயிற்றுப் போக்கு போன்ற தொந்தரவுகள் வருவது கிடையாது. மரத்தின் மீதும், கரடுகளிலும் ஆடுகள் மேயும். அப்போது சில ஆடுகள் மரத்தில் இருந்து விழுவதால் அதன் கால் உடைய அதிக வாய்ப்புகள் இருக்கும். இந்த நேரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, உளுந்த மாவு இரண்டையும் பிசைந்து ஆடுகளின் உடைந்த கால்களில் பனைமட்டை, துணி கொண்டு கட்டிவிடுவோம்.
அதிகபட்சமாக ஆடுகளை ஒரு வருடம் வரை வளர்ப்போம். நாவல்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சித்திரைத் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்தத் திருவிழாக்களில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். இதனை மையப்படுத்தி வீடுகளில் ஆடுகளை வளர்த்து வருகிறோம். 60 ஆடுகளில் வருடத்திற்கு 30 ஆடுகள் வரை விற்பனை செய்கிறோம். ஆட்டின் மூலம் தினமும் வருமானம் கிடைக்காது. ஆனால் வருடத்தில் ஒருமுறை சேர்த்து விற்கும்போது நல்ல வருமானம் கிடைக்கிறது. அந்த வகையில் ஒரு கிடா ஆட்டினை ரூ.12 ஆயிரம் என்ற கணக்கில் விற்பனை செய்கிறோம். இதனால் ஒவ்வொரு வருடமும் 30 ஆடுகள் விற்கும்போது சராசரியாக ரூ.2.60 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். தீவன செலவு, போக்குவரத்து செலவு, பராமரிப்பு செலவு என்று எதுவும் இல்லாததால் ரூ2.60 லட்சமும் லாபமாகவே கிடைக்கிறது. கால்நடைகளின் கழிவுகள் விவசாயத்திற்கு நல்ல உரமாக இருக்கும். இதனால் ஆட்டுப்புழுக்கைகளை அதிகமாக விவசாயிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். அவர்களுக்கு ஒரு மூட்டை ஆட்டுப்புழுக்கை ரூ.100 என விற்பனை செய்கிறோம். இதன்மூலம் மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.
ஆட்டு வளர்ப்பு மட்டுமில்லாமல் வீட்டில் 40 கோழிகளும் வளர்த்து வருகிறோம். இந்த கோழிகள் மூலம் தினமும் முட்டைகள் கிடைத்து வருகிறது. வீட்டு பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள முட்டைகளை விற்பனை செய்கிறோம். இதிலிருந்து ரூ.1500 கிடைக்கிறது. ஆடு வளர்ப்பு நல்ல தொழில்தான். ஆனால் ஓய்வு எடுக்கலாம், வெளியூர் செல்லலாம் என்றால் முடியாது. ஆடு வளர்ப்பில் கிடைத்த வருமானத்தின் மூலம் மட்டுமே இரண்டு வீடுகள் கட்டி இருக்கிறோம்’’ என தான் கட்டிய வீட்டை ஆசையாக காட்டிப் பேசிய கோலப்பனின் முகத்தில் பூரிப்பு மின்னுகிறது.
கருப்புக்குத்தான் மவுசு!
நாட்டு ஆடு, வேலி ஆட்டிற்கு குமரி மாவட்டத்தில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. நாம் ஆட்டை விற்பனை செய்ய வேண்டும் என்றால் வியாபாரிகளுக்கு போன் செய்தவுடன் அவர்கள் பணத்துடன் வந்து ஆடுகளைப் பிடித்து செல்கின்றனர். ஆடுகளைக் கொடுத்தவுடன் நமக்கு பணம் கையில் வந்து விடும். இந்த ஆடுகளில் கருப்பு வண்ணம் உள்ள ஆட்டிற்கு நல்ல மவுசு உள்ளது. அதனால் கருப்பு ஆடுகளை விற்கும்போது மற்ற ஆடுகளைக் காட்டிலும் ரூ.2 ஆயிரம் அதிகம் வைத்து விற்பனை செய்கிறோம் என்கிறார் கோலப்பன்.