சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து 5 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஜூன் முதல் வாரம் வரை வெவ்வேறு நாட்களில் நீதிபதிகளாக ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றனர். இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, இவர்கள் 5 பேருக்கும் நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், டி.கிருஷ்ணகுமார், எம்.சுந்தர், எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் பி.முத்துக்குமார்தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் எஸ்.அமல்ராஜ், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் கமலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.