சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதையடுத்து, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் வளி மண்டல காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.இன்று முதல் 17ம் தேதி வரையில் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவுப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.