சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட ஒன்றிய குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் குழு தலைவர் குணால் சத்யாத்ரி கூறியதாவது:ஆய்வு பணிகள் மேற்கொண்டதில் எங்களுக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே வெளியிட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தகுந்த அறிவியல்பூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே திறந்துவிட்டதால் பெருமளவிலான வெள்ளச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை பாதுகாத்து, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் மாநில அரசு தடுத்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் விரைவாக செயல்பட்டு நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு, மருந்து பொருட்கள் வழங்கி சிறந்த முறையில் அரசு பாதுகாத்துள்ளது.
தமிழ்நாடு அரசு எங்களுக்கு வெள்ளச் சேதம் குறித்த விவரங்களை அளித்துள்ளது. எங்கள் குழுவும் பல்வேறு இடங்களை பார்வையிட்டு, உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து விவரங்களை திரட்டியுள்ளது. இதன் அடிப்படையில் குழு தயாரிக்கும் ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசுக்கும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கும் அளித்து நிவாரண நிதி உதவிகள் விரைவில் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.