Saturday, June 1, 2024
Home » டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிரொலி.. வீடுகளை சூழ்ந்த மழைநீர், சம்பா தாளடி பயிர் அறுவடை பாதிப்பு: புகார் எண்கள் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிரொலி.. வீடுகளை சூழ்ந்த மழைநீர், சம்பா தாளடி பயிர் அறுவடை பாதிப்பு: புகார் எண்கள் அறிவிப்பு

by Nithya

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டியதால் சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியது. சம்பா தாளடி பயிர்கள் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மயிலாடுதுறையில் சம்பா தாளடி பயிர்கள் அறுவடை தொடங்கிய நிலையில் திடீரென கொட்டிய கனமழையால் 25 ஏக்கரில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழை தொடர்ந்தால் பயிர்களை காப்பாற்ற முடியாது என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சீர்காழி நகராட்சியில் தென்பாதி என்ற இடத்தில் சாலைகள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்த நிலையில் முறையான வடிகால் வசதி இல்லாததே மழைநீர் தேங்கியதற்கு காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மோனிஷா என்ற சிறுமி உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் நாகையில் தொடர் கனமழையால் அங்குள்ள மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். நாகையில் மழை பாதிப்பு குறித்து 04365 – 251992, 1077 என்ற கட்டுப்பாட்டு உதவி எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பூக்காரத் தெரு சுனாமி குடியிருப்புகளில் சுமார் 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்திருப்பதால் மக்கள் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும், மழைநீரை விரைவாக வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

13 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi