Saturday, June 1, 2024
Home » லப்டப்… லப்டப்… இளைஞர்களை அதிகமாக தாக்கும் மாரடைப்பு

லப்டப்… லப்டப்… இளைஞர்களை அதிகமாக தாக்கும் மாரடைப்பு

by Neethimaan

* பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை
* தமிழ்நாடு சுகாதாரத்துறை நடவடிக்கை

இதயத்தின் முக்கிய பணியே, உள்ளங்கால் விரல் நுனி முதல் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சீராக ரத்தத்தை கொண்டு சென்று மனிதனின் உடலில் ரத்த ஓட்டத்தை சரிசமமாக வைத்திருப்பதுதான். அதை செய்வது ரத்த குழாய். எனவே, உடல் முழுக்க ரத்தம் சீராக செல்ல வேண்டுமானால் ரத்த குழாய்களில் அடைப்பு இருக்க கூடாது. அன்றைய காலகட்டத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட மாரடைப்பு, இப்போது 20 வயது இளைஞனையே தாக்குகிறது. அதற்கு காரணம் உணவு பழக்க வழக்கம், தூக்கம், மன அழுத்தம் மற்றும் சீரான உடற்பயிற்சி இல்லாததுதான். உலகளவில் 17.9 மில்லியன் பேர் இதயநோயால் இறக்கின்றனர். அதில், ஐந்தில் ஒரு பங்கு நோயாளிகள் இறப்பதும், அதே நோயுடன் போராடிக் கொண்டிருப்பதும் இந்தியாவில்தான் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், 2020ல் ஏற்பட்ட மாரடைப்பு மரணங்கள் 28,680, அதுவே 2021ல் மரண எண்ணிக்கை 28,449 ஆக இருந்தது. குறிப்பாக 25 – 45 வயதில் உள்ளவர்களுக்கு 38 சதவீதம் மாரடைப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 52% சதவீத மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளதாக தேசியக் குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளில் பதிவாகி உள்ளது. கொழுப்பினால்தான், இளைஞர்கள் அதிகளவு மாரடைப்பால் இறக்கின்றனர் அல்லது சிகிச்சை பெற்று வருகின்றனர். மனிதனின் மாரடைப்புக்கு முக்கிய காரணம், வாழ்வியல் முறை, உணவு பழக்கம், மன அழுத்தம். இதனால், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து அது ரத்த குழாயில் படிகிறது. இந்த ரத்தக் கட்டிகள், ரத்த ஓட்டத்தை பாதித்து மாரடைப்பு ஏற்படுகிறது.
தற்போது உள்ள காலகட்டத்தில் இதய நோய் இருப்பதாக சந்தேகம் வந்தாலே முதன்மை சுகாதார சோதனை செய்யவேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து மூத்த இதயநோய் நிபுணர் ஜே.சிசிலி மேரி மஜெல்லா கூறியதாவது: தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு, உடற்பயிற்சி இல்லை, உணவில் கட்டுப்பாடு இல்லை மற்றும் இயந்திரதனமான வாழ்க்கை முறைகள்தான் காரணம். குறிப்பாக, இரவு பணி, பர்கர், பீட்சா உணவுகள் அதிக அளவில் உட்கொள்வது, பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி உணவு தயாரித்து சாப்பிடுவது, மைதா உணவுகள் அதிக அளவில் உட்கொள்வதால் கொழுப்பு அதிகரிக்கிறது. இது ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்துவதால், மாரடைப்பு ஏற்படுகிறது. அடுத்ததாக குடிப்பழக்கம் மற்றும் புகை பழக்கம். இதனால், ரத்தக்குழாய் சுருக்கம் ஏற்படும் அதனால் மாரடைப்பு ஏற்படக்கூடும்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கு மாரடைப்பு ஏற்பட காரணம் தீவிர விளையாட்டு அல்லது பயிற்சியின்போது உடலில் பொட்டாசியம் குறைகிறது, இதயத்துடிப்பு 200 தாண்டி செல்கிறது இதனால் உடனடி மாரடைப்பு ஏற்படுகிறது. இதை எச்ஒசிஎம் என்று அழைக்கபடும். கொரோனாக்கு பிறகு ரத்த குறையும் தன்மை அதிகரிப்பால் அந்த மாரடைப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு தகாயாசுவின் தமனி அழற்சி, சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ், ஆன்டிபாஸ்போலிப்பிட் உள்ளிட்ட காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆண்களுக்கு கோகோயின் கரோனரி பிடிப்பு, மயோகார்டியல் பிரிட்ஜெய்ங் உள்ளிட்ட காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.

வாழ்க்கை முறை, உணவு முறையை சரியாக பின்பற்றுவது, குறிப்பாக தொப்புள் மேல் வலி அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், இந்த வழிமுறைகளை பின்பற்றினால் மாரடைப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம். ஓமந்தூரார் மருத்துவமனையை பொறுத்தவரையிலும் 24 மணி நேரமும் சிறப்பு இதய சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. 7 தீவிர சிகிச்சை பிரிவுடன் 100 மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளது. குறிப்பாக ஒரு நாளுக்கு 15 வகையான இதய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியில் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் குறைந்தது 2 லட்சம் ஆகும் ஆனால் இங்கு அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும்
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது இதய நோய்களை தடுக்க உதவும். எண்ணெய் நிறைந்த உணவுகள் (குறிப்பாக ஃப்ரை, வறுவல் உணவுகள்), பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு அதிகமான உணவுகள் ஆகியவை ரத்த நாளங்களுக்குள் கொழுப்புகளை படிய வைத்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. முட்டைகோஸ், கீரைகள் போன்ற பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, டியூனா போன்ற ஒமேகா 3 அமிலம் நிறைந்த மீன்கள், வால்நட் மற்றும் அக்ரூட் பருப்புகள், பீன்ஸ், பூண்டு ஆகியவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உலகில் இதயநோய் இறப்பு அதிகம்
உலகளவில் இதய நோய் (CVD) அதிகளவில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் சிவிடியால் இறப்பவர்களின் ஆண்டு எண்ணிக்கை 2.26 மில்லியனிலிருந்து (1990), 4.77 மில்லியனாக (2020) உயரந்துள்ளது. கிராமப்புறத்தில் 1.6% முதல் 7.4% வரை மற்றும் நகர்ப்புற மக்களில் 1% முதல் 13.2% வரை அதிகரித்துள்ளது.

இளம் வயதில் மாரடைப்பால் இறந்த பிரபலங்கள்
ஹிந்தி நடிகர் சித்தார்த் சுக்லா, அமித் மிஸ்திரி, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், நிதின் கோபி, நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா

You may also like

Leave a Comment

5 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi