சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் செவ்வாய்கிழமை (27.06.2023) தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக அமலாக்கத்துறை காவலில் வைத்திருப்பதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என்று கூறினார்.
வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு வழக்கு விசாரணையை செவ்வாய்கிழமை (27.06.2023) தேதிக்கு ஒத்திவைத்தது. அமலாக்கத்துறை தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலத்துடன் சேர்க்க கூடாது என்ற அமலாக்கப் பிரிவு கோரிக்கைக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.