மீரட்: உத்தரபிரதேசத்தில் 4 கைகள் மற்றும் 4 கால்களுடன் புதிதாகப் பிறந்த குழந்தையின் விநோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணுக்கு 4 கைகள், 4 கால்களுடன் ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து மருத்துவர் நவ்ரத்ன குப்தா கூறுகையில், ‘பிரசவித்த குழந்தைக்கு 4 கைகள், 4 கால்கள், 2 பிறப்புறுப்புகள் உள்ளன. மீரட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குழந்தையின் குடும்பத்தினர் விரும்புகின்றனர். குறைபாடுகளுடன் பிறந்த அந்த குழந்தைக்கு, அறுவை சிகிச்சை மூலமே கூடுதல் உறுப்புகளை அகற்ற முடியும். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். மேல் சிகிச்சைக்காக முசாபர்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்’ என்றார்.