Sunday, September 1, 2024
Home » காவல் நிலையம் முன் வாலிபர் இறந்த விவகாரம் சென்னை கார் டிரைவர் அதிரடி கைது

காவல் நிலையம் முன் வாலிபர் இறந்த விவகாரம் சென்னை கார் டிரைவர் அதிரடி கைது

by Lakshmipathi

நெய்வேலி : நெய்வேலி அடுத்த கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (36). தமிழக வாழ்வுரிமை கட்சி தொகுதி பொறுப்பாளராக இருந்தார். இவர் கடந்த 25ம் தேதி இரவு பைக்கில் வந்த போது வாகன தணிக்கையில் இருந்த போலீசார் ஆவணங்களை கேட்டபோது இல்லாததால் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று பைக்கை பறிமுதல் செய்து அனுப்பி விட்டனர். இதனிடையே நள்ளிரவில் ராஜ்குமார் காவல் நிலையம் எதிரே சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மறுநாள் இதைப்பார்த்த உறவினர்கள் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி. ராஜாராம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

இதனிடையே அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அவ்வழியாக வந்த கார் ராஜ்குமார் மீது மோதியதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து எஸ்.பி. ராஜாராம் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சபியுல்லா அறிவுறுத்தலின் பேரில், நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையில், உதவி ஆய்வாளர் அழகிரி, சிறப்பு உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், முதல்நிலை காவலர் கோவிந்தராசு, தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிசிடிவி கேமரா மூலம் வாகனத்தை தீவிரமாக தேடி வந்தனர். அதன்படி சென்னையில் இருந்து வடலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக ஒரு காரில் 4 பேர் வந்துள்ளனர்.

இவர்கள் வடலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். இந்நிலையில் 4 பேரில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பெரியரெட்டியார் பட்டியை சேர்ந்த மணிவேல் மகன் ஹரிஹரன் (35) என்பவர் காரை நள்ளிரவில் எடுத்து கொண்டு நெய்வேலி டவுன்ஷிப் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வடலூர் நோக்கி வந்தபோது நெய்வேலி நகர காவல் நிலையம் எதிரே ராஜ்குமார் மீது மோதியதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த ஹரிஹரனை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். ஹரிஹரன் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் விபத்து ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

7 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi